சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்திரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 10ஆம் தேதி பிற்பகல் நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான இடங்களில் 12 மணிக்கு முன்னதாகவே போராட்டக் களங்களுக்கு வந்த விவசாய சங்கத்தினர், தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் போராட்டம் நடத்தும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி காவல்துறை அதிகாரிகளும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
விவசாயிகள் கடந்த மாதம் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கினர். நீண்ட கால போராட்டத்திற்குத் தேவையானப் பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான டிராக்டர் வாகனங்களில் சென்ற விவசாயிகளை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு, கனவுரி எல்லைகளில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடாதபடி தடுப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாய சங்கத்தினரையும் தடுப்பதற்காக டெல்லியின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.