இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு (2024) சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்குமென்று ‘புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ்’ ஆய்வுக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
சீனப் பொருளியல் மெதுவடையும் நிலையில், நிறுவனங்கள் இந்தியப் பொருளியல் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ள முனைந்திருப்பதை அது சுட்டியது.
இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 விழுக்காடு உயருமென்று ஆய்வாளர் சாரா ஜேன் மஹ்முத் மார்ச் 15ஆம் தேதி குறிப்பிட்டுள்ளார். ஒப்புநோக்க, சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் அந்த விகிதம் நான்கு விழுக்காடாக இருக்கும்.
எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ், ஜூலியஸ் பேயர் குழுமம், மிட்சுபிஷி யுஎஃப்ஜே நிதிக் குழுமம், டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் போன்றவை இந்தியாவில் தொடர்ந்து வளர்ச்சி காண்பதையும் விரிவாக்கம் செய்ய முனைவதையும் ஆய்வாளர் சாரா சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் முதலீட்டாளர்கள் அதிகப் பொருளீட்டுகின்றனர்.
இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளம் ஹாங்காங் ஊழியர்களைவிட 4.5 விழுக்காடு அதிகம். சிங்கப்பூர் ஊழியர்களைவிட அது 7.7 விழுக்காடு அதிகம் என்று ‘புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ்’ ஆய்வறிக்கை கூறுகிறது.
இருப்பினும் தனியார் வங்கிகளில், குறிப்பாக நிர்வாக முடிவுகளுக்குப் பொறுப்பேற்காத பதவிகளை வகிப்போரின் ஊதியம் 50 முதல் 78 விழுக்காடு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய நிதித்துறை வளர்ச்சி காணும்போது அந்த இடைவெளி குறையுமெனக் கருதப்படுகிறது.
உயர் பதவிகளுக்கான ஊழியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் தொழில்நுட்பம், தொழிலில் ஏற்படக்கூடிய இடையூறுகளை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் திறனாளர் பற்றாக்குறையாலும், இந்தியாவில் சம்பளம் தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.
இந்திய வங்கிகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு மிக அதிக ஊதியம் வழங்கப்படுவதாகவும் தலைமைப் பதவிகளில் உள்ளோருக்கு 1மில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் (S$1.34மில்லியன்) சம்பளம் தரப்படுவது வழக்கமென்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.