திருவனந்தபுரம்: ஆடவர் ஒருவர் பொது இடத்தில் தன் மனைவியின் கழுத்தைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் மார்ச் 20ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரில் அமைந்துள்ளது களமசேரி.
அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியர், வெவ்வேறு மதத்தவர். இருப்பினும், எட்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
ஆறு வயதாகும் அவர்களின் பிள்ளை, அப்பாவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னோடு மீண்டும் சேர்ந்து வாழும்படி மனைவியிடம் ஆடவர் கேட்டதற்கு மாது மறுத்துவிட்டார்.
இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில் மனைவியின் தொண்டையைக் கத்தியால் குத்தினார் ஆடவர்.
நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டதால் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டது.
தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் மாது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆடவரைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.