இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் புரட்சி

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் புரட்சி

1 mins read
6beea468-31b6-4fd8-bc23-0424ad150788
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள வானூர்தி சோதனைத் தளத்தில் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விண்ணில் செலுத்தக்கூடிய ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மறுபயன்பாட்டு ராக்கெட்டின் (RLV) தரையிறங்கும் திறனை நிரூபிப்பதற்காக இது 2023 ஏப்ரல் மாதம் கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள வானூர்தி சோதனைத் தளத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட ஓடுபாதையில் மாதிரி ராக்கெட் (RLV-LEX-01) வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை அதே சோதனை தளத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் மூலம் மறுபயன்பாட்டு வானூர்தித் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புஷ்பக் என பெயரிடப்பட்டுள்ள இறக்கையுடன் கூடிய இந்த மாதிரி ராக்கெட் (RLV-LEX-02), விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் உயரே கொண்டு செல்லப்பட்டு, 4.5 கிமீ உயரத்தில் விடுவிக்கப்பட்டது. விண்வெளியில் இருந்து திரும்பும் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் அணுகுமுறை மற்றும் அதிவேகத்தில் தரையிறங்கும் நிலைமைகளை, இந்தப் பரிசோதனை தெளிவுபடுத்தி இருப்பதாக இஸ்ரோ கூறியது.

மிகவும் சவாலான இந்த திட்டத்தை சிறிய குறையும் இல்லாமல் செயல்படுத்திய விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்