செகந்திராபாத்: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்த 25 வயதுப் பெண் ஜடலா மாளவிகாவுக்கு சிறுவயதில் இருந்தே காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்பது கனவு. அவரைக் காவல்துறை அதிகாரியாகப் பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்புப் படையில் துணை ஆய்வாளர் பணிக்கு அந்தப் பெண் விண்ணப்பித்தார்.
ஆனால், கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக உடல் தகுதித் தேர்வில் அவர் தேறவில்லை. அதனை அறியாத உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் மாளவிகா காவல்துறை அதிகாரி ஆவார் என்று நம்பி இருந்தனர்.
அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு தொடக்கத்தில் போலியாக உலவத் தொடங்கினார் அந்தப் பெண். செகந்திராபாத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆய்வாளர் என்று தம்மை சொல்லிக்கொண்டு உலவிய அவர், ரயில்களில் சோதனை செய்வதுடன் விழாக்கள், உறவினர் வீடுகள், கோவில்கள் என எங்கு சென்றாலும் காவல்துறை உடையில் காணப்பட்டார். கோவில்களில் அவருக்கு விஐபி மரியாதை வழங்கப்பட்டது.
மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்திற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள நல்கொண்டாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று அவரை அழைக்கும் அளவுக்கு காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் செயல்பட்டார்.
ஓராண்டு காலம் ஓடிவிட்ட நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் தமது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் காக்கி உடையை அணிந்திருந்தார் மாளவிகா. அவரை மணமுடிக்க இருந்த ஆடவருக்கு சந்தேகம் ஏற்படவே கணினித் தொழில்நுட்பரான அவர், ரயில்வே பாதுகாப்புத் துறையில் விசாரித்து மாளவிகா போலி அதிகாரி என்பதைத் தெரிந்துகொண்டார்.
புகார் கிடைத்ததைத் தொடர்ந்து தமது படையினர் மாளவிகாவைக் கைது செய்ததாக செகந்திராபாத் ரயில்வே பாதுகாப்புப் படை கண்காணிப்பாளர் ஷேக் சலிமா கூறினார்.