மும்பை: இந்தியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வித்தியாசமான வழக்கில் ரூ.85,000 இழப்பீடு வழங்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவன ஊழியரான மோகித் நிகம், 2018ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் புறப்பட வேண்டிய அவ்விமானம், 24 மணி நேரம் தாமதமாக திங்கட்கிழமை மாலைதான் புறப்பட்டது.
குறைவான சேவைத் திறன் குறித்துப் புகாரளித்த நிகம், தனக்கு ஏற்பட்ட உடல், மன வேதனைக்கும் வேலை இழப்பிற்கும் விமான நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என்று கோரியிருந்தார்.
விமான நிறுவனத்தின் கவனக்குறைவால்தான் தாமதம் ஏற்பட்டது என்ற ஆதாரத்தை அவர் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிகம் அந்தத் தகவலைப் பெற்றிருந்தார்.
அவற்றின் அடிப்படையில் அவருக்கு இழப்பீடு வழங்க, ஏர் இந்தியாவிற்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தனது பயணச்சீட்டுக் கட்டணத்தைத் திரும்பப் பெற நிகம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.