மத்திய பிரதேசம்: ஊனத்தைக் காரணம் காட்டிச் சிலர் வழிப்போக்கர்களிடம் பணம் கேட்பதை நாம் பார்த்திருப்போம். ஏன், நாமே பரிதாபப்பட்டு பணம் கொடுத்திருப்போம்.
ஆனால், போபாலில் ஊனம் என்று கூறிக்கொண்டு பிச்சைக்காரன் ஒருவன் நாடகமாடிய சம்பவத்தில் முதியவர் ஒருவருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.
பிச்சைக்காரனை, துடைப்பான் ஒன்றைக் கொண்டு அடிக்கத் தொடங்கிவிட்டார் அந்த முதியவர்.
உட்கார்ந்திருந்த பிச்சைக்காரனை விடாப்பிடியாக எழுந்திருக்கச் சொன்னார் முதியவர்.
தன்னை இவ்வாறு நடத்த வேண்டாம் என்று பிச்சைக்காரன் தொடக்கத்தில் கெஞ்சினார்.
ஆனால் முதியவர் கேட்பதாக இல்லை. கால்பகுதியில் துடைப்பானைக் கொண்டு அடித்ததுடன் எழுந்திருக்குமாறு பிடிவாதமாக முறையிட்டார்.
இறுதியில், அந்த பிச்சைக்காரன் எழுந்து நின்று தன் காலில் இருந்த ஒரு காயத்தைக் காண்பித்தார்.
உடனே, அந்த இடத்தை விட்டு போகச் சொன்னார் முதியவர்.
பிச்சைக்காரனும் நொண்டிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, பிச்சைக்காரனைவிட முதியவர் மீது அதிகமானோர் சினங்கொண்டனர்.
ரமலான் மாதத்தில் இவ்வாறு ஒருவரைத் துன்புறுத்தக்கூடாது என்று சிலர் சுட்டினர்.
வேறு சிலரோ முதியவருக்கு ஆதரவாகப் பேசினர்.
மொத்தத்தில், பொய் எதற்கும் உதவாது என்பதே இச்சம்பவத்தில் வெளிப்பட்டது.