புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அந்த நேர்காணலில் இந்தியா - சீனா இடையிலான விரிசல்கள் குறித்து அவர் பேசியுள்ளார். “இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் தனித்துவமானது. இருதரப்பு உறவில் உள்ள விரிசல்களை சரிசெய்வதற்கு, எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை,” என்றார் மோடி.
“ராணுவ மட்டங்களில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு ஈடுபாட்டின் மூலம், நமது எல்லைகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
“2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அண்மையில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதால் இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
எனவே, “இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்’‘, எனப் பிரதமர் நரேந்திர மோடி அந்த ஊடகத்துக்கும் அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து
“காஷ்மீர் மண்ணில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து நீங்களே நேரில் பாருங்கள். வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய செயல்முறைகள் அங்கு செயல்படுத்துவதைக் காண வேண்டும். காஷ்மீரின் மக்கள் அமைதியின் பலனை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2.1 கோடி சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்துள்ளனர். பயங்கரவாத சம்பவங்கள் அங்கு கணிசமாகக் குறைந்துள்ளன,” என்றார் இந்தியப் பிரதமர்.