கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனைக் காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.
இதனைத் தொடர்ந்து, ரஹீம்மீது பெற்றோர் தொடுத்த வழக்கில் அவருக்கு 18 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அதை மரண தண்டனையாக மாற்றி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது கொலை அல்ல விபத்து என்று ரஹீம் சார்பாக பல்வேறு அமைப்புகள் வாதிட்டன. இறுதியில் நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில் ரூ. 34 கோடி அளிக்கும்பட்சத்தில் மன்னிப்பு அளிக்க பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பு முன்வந்தது. மேலும் ஏப்ரல் 18ம் தேதிக்குள் ரூ. 34 கோடி செலுத்தினால் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதாக கூறப்பட்டது.
ரஹீமை காப்பாற்ற ஒட்டுமொத்த கேரள மக்களும் ஒன்று திரண்டனர். இதற்காக ஒரு செயலி, ஐந்து வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இருபது நாட்கள் முன்புவரை ரூ.2 கோடி மட்டுமே திரட்டப்பட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ரூ.34.4 கோடி நிதி திரட்டப்பட்டுவிட்டதாக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. ஒரு அப்பாவியை காப்பாற்ற சாதி, மதம், இன பேதம் பாராமல் கேரள மக்கள் ஒன்று திரண்டு செய்திருக்கும் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.