சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள பிரபல திரைப்பட நடிகை கங்கனா ரணாவத்திற்கு கடும் சவாலைத் தரும் வகையில், காங்கிரஸ் கட்சியும் பிரபலமான வேட்பாளரை களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
மண்டி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் கங்கனா ரணாவத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தத் தொகுதிக்கு கடைசி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை கேட்டதும் பாஜக வட்டாரம் அதிர்ந்துபோனதாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம் களமிறக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு அந்த தொகுதியில் இருக்கும் செல்வாக்குதான் காரணம்.
கங்கனாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் சிம்லா புறநகர்த் தொகுதி எம்எல்ஏவான விக்ரமாதித்ய சிங்கை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.
இவர் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரபத்ரசிங்கின் மகன். தாய் பிரதீபா சிங். இவர்தான் தற்போது மண்டி தொகுதி எம்பியாகவும் இமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
இத்தொகுதி விக்ரமாதித்ய சிங் குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியாகும். இங்கு மூன்று இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 20 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது.
இவற்றில் விக்ரமாதித்ய சிங்கின் தந்தை வீரபத்ரசிங் மூன்று முறையும் தாய் பிரதீபா சிங் மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால், செல்வாக்குமிக்க வேட்பாளரான விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து வெற்றிபெற கங்கனா மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.