புதுடெல்லி: இணைய விற்பனைத் தளங்களில் ‘ஆரோக்கிய பானங்கள்’ (ஹெல்த் டிரிங்க்ஸ்) பிரிவிலிருந்து போர்ன்விட்டா உட்பட அனைத்துப் பானங்களையும் நீக்குமாறு அந்நிறுவனங்களுக்கு இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சிறார் உரிமைப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடத்திய விசாரணையில், போர்ன்விட்டாவில் ஏற்புடையதைவிட அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சு ஏப்ரல் 10ஆம் தேதியிடப்பட்ட தகவலை வெளியிட்டது.
முன்னதாக, பாதுகாப்புத் தரநிலைகளையும் வழிகாட்டுதல்களையும் பூர்த்திசெய்யத் தவறி, தூள் பானங்களை ‘ஆரோக்கிய பானங்களாக’ வகைப்படுத்திய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்திற்கு சிறார் உரிமைப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் அறைகூவல் விடுத்திருந்தது.
போர்ன்விட்டாவில் அதிகப்படியான சர்க்கரை, கோகா திடப்பொருள்கள், தீங்கு விளைவிக்கும் வண்ணப்பொருள்கள் இருப்பதாகவும் சிறார்களிடம் புற்றுநோய் உட்பட கடும் உடல்நலக் கேடுகளுக்கு அவை வழிவகுக்கும் என்றும் யூடியூப் பிரபலம் ஒருவர் காணொளி வெளியிட்டதைத் தொடர்ந்து, போர்ன்விட்டாவின் ‘ஆரோக்கியமற்ற’ தன்மை குறித்த சர்ச்சை எழுந்தது.