புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனி, 34, தன் கணவர் சத்பீருடன் அந்தப் பகுதியில் வசித்தார்.
இந்தத் தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டதாகக் கூறப்பட்டது.
சில நாள்களுக்குமுன் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பில், பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி, 15 வயது மகளுடன் சோனி-சத்பீர் தம்பதி தகராறு செய்தனர்.
இதில், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து, சோனி முறுக்கியதாகத் தெரிகிறது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய சிறுமியின் குடும்பத்திற்கும் சோனி-சத்பீர் தம்பதிக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தமுறை, சிறுமி கத்தி ஒன்றை எடுத்து வந்து சோனியை வயிற்றில் குத்தியதாகவும் தாக்குதலில் சோனியின் வலது கையிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சோனி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை சிறுமியைக் கைது செய்தது. அவர் சிறுவர் சீர்திருத்த முன்னிலைப்படுத்தப்படுவார் என்று காவல்துறை தெரிவித்தது.