உதகை: நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) தேர்தல் பிரசாரம் செய்யச் சென்றார்.
அதற்காக மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார்.
இந்நிலையில், நீலகிரியில் ராகுல் காந்தி வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹெலிகாப்டர் தளத்துக்குச் சென்ற பறக்கும் படை அதிகாரிகள் அந்த ஹெலிகாப்டரை முழுமையாகச் சோதித்தனர்.
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சோதனை நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்குச் சென்றார் ராகுல் காந்தி.
அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் சந்தித்தார்.