பாலிவுட் நடிகர் அமீர் கானின் அரசியல் நிலைப்பாடு குறித்த ‘டீப் ஃபேக்’ காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் நிலையில், அது போலியானது என்றும் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக காணொளி ஒன்று சமூக ஊடகத் தளங்களில் பரவிவருகிறது.
அதன் தொடர்பில் மும்பை காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
“அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டி, அண்மையில் வெளியான காணொளி குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான காணொளி என்பதையும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார்,” என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அமீர் கானின் அந்தக் காணொளி, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது என்றும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.