புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் தொடர்ந்து இனிப்புகளைச் சாப்பிட்டு வருவதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவால் வழக்கையும் விசாரிக்கிறது.
இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமது உடலில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதாகவும் தனது மருத்துவரிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் கெஜ்ரிவால்.
அவரது இக்கோரிக்கைக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, கெஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோய் (டைப் 2) இருப்பதாகவும் அதைப் பொருட்படுத்தாமல் சிறையில் உருளைக்கிழங்கு, மாம்பழம், இனிப்பு வகைகளை அவர் உட்கொண்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி பிணை பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து கெஜ்ரிவாலின் அன்றாட உணவு அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.