புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அதிகம் எடுத்துகொள்கிறார் என்ற அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் உள்ள கெஜ்ரிவால் நவராத்ரி பூஜை பிரசாதமான ஆலு பூரி ஒரு முறையும், மாம்பழம் மற்றும் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக வாதிட்டார். அதோடு சர்க்கரை இல்லாத தேநீரையே அவர் அருந்தியதாகவும் குறிப்பிட்டார். ஆனால் சர்க்கரை அளவை அதிகரித்து பிணை ஆணை பெற முயற்சிப்பதாக அமலாக்கத்துறை கூறுவது அபத்தமானது என்றும் கெஜ்ரிவால் குற்றவாளி கிடையாது என்றும் அவர் தமது மருத்துவரிடம் 15 நிமிடங்கள் கூட காணொளி வாயிலாக பேச முடியவில்லை என்றும் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.