வயநாடு: பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தின்போது உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வயநாட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரியங்கா கலந்துகொண்டு பேசினார்.
விலைவாசி உயர்வு,வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மோடி தலைமையிலான பாஜக அரசு தவறிவிட்டது.
நாட்டின் வளர்ச்சியையும், உண்மையான பிரச்சினைகளையும் பிரதமர் மோடி பேசுவதில்லை. மக்களின் வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்சினைகளை எழுப்பி வருகிறார் என்றார் அவர்.
மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது என்று பிரியங்கா கூறினார்.
சித்ரதுர்கா மற்றும் பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளில், மக்களை திசை திருப்புவதற்காக தேர்தல் வரும்போதெல்லாம் மோடி ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதாக பிரியங்கா குற்றம் சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் “தாலி, தங்கம்” கருத்துக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடங்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது தாயார் சோனியா காந்தியின் தாலி, இந்த நாட்டுக்காக தியாகம் செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் பேசிய மோடி காங்கிரசின் செயல்திட்டம், நாட்டின் செல்வத்தை முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்வதாகும் என்றும், ஆட்சிக்கு வாக்களித்தால் “உங்கள் தாலிகளைக் கூட அவர்கள் விடமாட்டார்கள்” என்றும் கூறினார்.
போர் நடந்தபோது எனது பாட்டி இந்திரா காந்தி தனது தங்கத்தை நாட்டுக்கு தானமாக வழங்கினார். என் தாயின் தாலி, இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.
தாலியின் மதிப்பை மோடி புரிந்துகொண்டிருந்தால், இதுபோன்ற ஒழுக்கக்கேடான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் என்றார் பிரியங்கா.