ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இவ்விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.