நன்கு படித்து, தேர்வுகளை எழுதினாலும் முடிவுகள் வரும்வரை மாணவர்களுக்கு உள்ளம் சற்று அலைபாயவே செய்யும்.
சிலர் எதிர்பார்த்ததைவிட அதிகமாக மதிப்பெண் பெற்றுவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பர். சிலரோ நினைத்த அளவு மதிப்பெண் கிடைக்காமல் வருந்துவர்.
குஜராத் பள்ளி மாணவி ஒருவருக்கோ மிகவும் வித்தியாசமான அனுபவம்.
தேர்வுக்கான அதிகபட்ச மதிப்பெண்ணைவிடக் கூடுதலாக மதிப்பெண் வாங்கினால் யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுவது இயல்பே.
வன்ஷிபென் மணிஷ்பாய் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவி. அண்மையில் இவருக்கு வழங்கப்பட்ட தேர்வு முடிவுகளில், மாணவி கணிதத்தில் 200க்கு 212 மதிப்பெண்களும் குஜராத்தி மொழியில் 200க்கு 211 மதிப்பெண்களும் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் கணக்கீட்டில் தவறு நடந்ததாகக் கூறிய பள்ளி நிர்வாகம், அவரது மதிப்பெண்களில் திருத்தம் வெளியிட்டது. குஜராத்தி மொழிப் பாடத்தில் 200க்கு 191 மதிப்பெண்களும் கணிதத்தில் 200க்கு 190 மதிப்பெண்களும் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தவறு எவ்வாறு நேர்ந்தது என்பதற்கான காரணத்தைக் கண்டறியவும் இத்தகைய தவறு மீண்டும் நேராமல் தடுக்கவும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்டக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.