புதுடெல்லி: கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இந்தியாவில் உள்ள 150 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 24% ஆகக் குறைந்துள்ளது.
அத்துடன், இந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிடவும் 21% என கணிசமான அளவுக்குக் குறைந்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நீர் ஆணையம் (சிடபிள்யூசி) இந்தியா முழுவதும் உள்ள 150 முக்கிய நீர்த்தேக்கங்களின் சேமிப்பு நிலை குறித்த வாராந்திர அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் நீர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தி உள்ளது.
தென் பகுதி நீர்த்தேக்கங்களின் நீரின் இருப்பு நிலை 14% ஆக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களின் நீர்த்தேக்கங்கள் கடந்த ஆண்டின் 37%ல் இருந்து 28% ஆகக் குறைந்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் பகுதியில் உள்ள 42 நீர்த்தேக்கங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

