ஆற்றில் இருந்து வெளியேறிய பத்து அடி நீளமுள்ள முதலை ஒன்று, மீண்டும் ஆற்றுக்குள் குதிக்க தடுப்புக் கம்பிகளின் மீது ஏறும் காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது.
ஆற்றில் இருந்து எப்படியோ வெளியேறி தரையில் ஊர்ந்த அந்தப் பெரிய முதலையைக் கண்டு பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கும் தொடர்ந்து வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து சென்று முதலையை மீட்க முயன்றபோது அவர்களிடம் இருந்து தப்பிக்க தடுப்புக் கம்பிகளின் மீது ஏறியது. ஆயினும் முயற்சி தோல்வி அடைந்து முதலை கீழே விழுந்தது.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சரில் உள்ள கங்கை ஆற்றுப் பகுதியில் நரோரா தடுப்பணையில் நிகழ்ந்த அந்த அதிசயச் சம்பவத்தைப் பலரும் படம் பிடித்தனர்.
அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
அதன் பின்னர், கயிறுகளைப் பயன்படுத்தி வன ஊழியர்கள் பத்திரமாக மீட்கும் காணொளியும் பரவி வருகிறது.
கீழே விழுந்ததால் முதலைக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறின.

