வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்: 8 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்: 8 பேர் உயிரிழப்பு

1 mins read
954660f8-6bb0-4706-8918-6d1e1b6cc698
அசாம் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். - படம்: ஏஎஃப்பி

கவுகாத்தி: ‘ரீமேல்’ புயலுக்குப் பிறகு இடைவிடாது பெய்துவரும் கனமழையால் அசாமில் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 11 மாவட்டங்களை சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உள்பட 3.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 6 பேர் மாண்டனர் என அசாம் மாநில பேரிடர் நிர்வாக கழகம் வெளியிட்ட வெள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், மொத்த உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. வெள்ள நீரில்,மொத்தம் 560 கிராமங்கள் மூழ்கியுள்ளன.

187 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 68,600 பேர் பாதுகாப்பாக அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10,23,063 கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளும் காவல், தீயணைப்பு, அவசரகால சேவை பிரிவினரும் உள்ளூர் அரசு நிர்வாகமும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மாநிலத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புயலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதேபோன்று காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்
அசாம்வெள்ளம்உயிரிழப்பு