புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்குள் போலி ஆதார் அட்டையைக் காண்பித்து நுழைந்த மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது சம்பவம் கடந்த ஜூன் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானபோது நிகழ்ந்தது.
நாடாளுமன்றத்துக்குள் உள்ளே செல்வதற்கு முன்பு வழக்கமான பரிசோதனைகள் நடைபெறும். அவ்வாறு பரிசோதிக்கும்போது ஆதார் அட்டைகளைக் காண்பித்த மூவர் மீது சிஐஎஸ்எஃப் வீரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூவரையும் விசாரித்தபோது அவை போலி ஆதார் கார்டுகள் என்று தெரியவந்தது.
மூவரிடமும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் காசிம், மோனிஸ், சோயப் என்பது தெரியவந்தது. புதிய நாடாளுமன்றத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இவர்களை பணியமர்த்தியதாகக் கூறப்படுகின்றது.
கைதானவர்கள் மீது ஆள்மாறாட்டம், குற்ற சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னால் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 7) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

