கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று (ஜூன் 13) இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அங்குள்ள மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி அறுவர் உயிரிழந்தனர். முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 1,500 சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே சிக்கி தவிக்கின்றனர்.
இதனிடையே கனமழையின் காரணமாக மாங்கன் மாவட்டத்தில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மின் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
சங்கலாங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட வெள்ளத்தில் இங்கிருந்த பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலமும் இடிந்து விட்டது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

