தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற உ.பி. மருத்துவமனையில் இரு மகள்களுக்கு திருமணம்

தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற உ.பி. மருத்துவமனையில் இரு மகள்களுக்கு திருமணம்

2 mins read
31187fb2-1791-4b98-97a2-cd1a38a29a49
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜுனைத் இக்பாலின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அவரின் இரு மகள்களின் திருமணம் அவசர சிகிச்சைப் பிரிவில் நடைபெற்றது. - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர் ஜுனைத் இக்பால் (55). இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் தார்கா சையத் (26), இளைய மகள் டான்சிலா சையத் (24) ஆகியோருக்கு மும்பையில் ஜூன் 22ஆம் தேதி திருமணம் நடத்த ஜுனைத் இக்பால் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த சூழலில் கடந்த 8ஆம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள இராஸ் லக்னோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே தனது உயிர் பிரிவதற்கு முன்பு இரு மகள்களின் திருமணத்தையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஜுனைத் இக்பால் விரும்பினார். அவரது மகள்களும் இதே விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் முறையிட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவில் திருமணத்தை நடத்த மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது.

அதன்படி கடந்த ஜூன் 13ஆம் தேதி ஜூனைத் இக்பால் படுக்கைக்கு அருகே இரு மகள்களின் திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதுகுறித்து ஜுனைத் இக்பாலின் மகள்கள் தார்கா சையத், டான்சிலா சையத் கூறியதாவது: “எங்கள் தந்தையே எங்கள் உலகம். அவரது ஆசி இல்லாமல் திருமணம் செய்துகொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முஸ்லிம் முறைப்படி திருமணச் சடங்குகளை நடத்த மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கோரினோம். மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு அனுமதி கிடைத்தது.

“எங்கள் தந்தை சுயநினைவுடன் இருக்கும்போது அவரது முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அவரது கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றினோம்,” என்று கூறினர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் இதர நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மணமகள்கள், மணமகன்கள், சமய போதகர் என 5 பேர் மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களோடு மருத்துவர்கள், தாதியரும் உடன் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்