புதுடெல்லி/கௌகாத்தி: இந்தியாவில் அனல்காற்று நாடெங்கும் வீசும் நிலையில் அங்கு 100க்கு அதிகமானோர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு 40,000க்கும் மேற்பட்டோர் வெப்ப தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனித நடவடிக்கைகள் காரணமாகவே பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் கூறும் நிலையில், ஆசியாவில் பில்லியன் கணக்கான மக்கள் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடஇந்தியாவில் நீண்டநாளாக நீடித்து வருவதாகக் கூறப்படும் வெப்ப அலை காலத்தில் தட்பவெப்ப நிலை கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து பகல், இரவு நேர தட்ப வெப்ப நிலை அதிகரித்துள்ளதால் பறவைகள் வானிலிருந்து இறந்து வீழ்வதாகவும் மருத்துவமனைகளில் வெப்ப பாதிப்பால் அதிகமானோர் சிகிச்சை நாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை சமாளிக்க இந்தியாவின் சுகாதார அமைச்சு மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள் நோயாளிகளை உடனடியாக கவனிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தலைநகர் டெல்லியிலுயுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளை கவனிக்க கூடுதல் படுக்கைகளை ஒதுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இது பற்றிக் கருத்துரைத்த சுகாதார அமைசசு அதிகாரி ஒருவர், மார்ச் 1லிருந்து ஜூன் 18ஆம் தேதிவரை 40,000 வெப்ப தாக்க சம்பவங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் குறைந்தது 110 பேர் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

