கௌகாத்தி: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான அசாமில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியதோடு ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் 19 மாவட்டங்களில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வாழும் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கரிம்கஞ்ச் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 14,000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக அங்குள்ள பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான கோபிலி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த வெள்ளத்தால் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் ஆற்றங்கரையோரம் உள்ள ஏராளமான விளைநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் போக்குவரத்துச் சாலைகள் துண்டிக்கப்பட்டு, மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது. மக்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

