புதுடெல்லி: இந்திய ராணுவத் தளபதியாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) பொறுப்பேற்றுக் கொண்ட லெஃப்டிணண்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியும் கடற்படைத் தளபதியான அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பள்ளிப் பருவ நண்பர்கள் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் கடற்படை, ராணுவத் தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் இருவரும் 1970களில் ஐந்தாம் வகுப்பில் ஒரே கல்வியறையில் பயின்றுள்ளனர் என்ற தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஏ. பரத் பூஷண் பாபு எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பள்ளிப்படிப்பை முடித்தபின்னரும் தங்களது நட்பைத் தொடர்ந்து வந்துள்ள இவர்கள், தத்தம் பணிகளில் ஏற்படும் இடையூறுகள், சிக்கல்களை அவ்வப்போது பரிமாறிக்கொண்டு அதற்கு தீர்வு கண்டு வந்துள்ளனர்.
தற்போது இந்திய முப்படைகளின் உயர் பதவிகளில் இவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இருவரும் தற்போது கடற்படை, ராணுவத் தளபதிகளாக மாறியிருப்பதன்மூலம், இவ்விரு படைகளிடையே உறவை வலுப்படுத்த பேருதவியாக அமையும் என்றும் சிக்கலான நேரங்களில் முடிவுகள் எடுக்கும்போது அது சுமூகமாக முடியும் என்றும் உயரதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

