அலிகர் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேரின் குடும்பங்களை வெள்ளிக்கிழமை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், நாராயண் சாகர் ஹரி மற்றும் ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது.
மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா புறப்படும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 121 போ் உயிரிழந்தனா். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடா்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்கிய சிக்கந்தர ராவ் காவல் துறையினா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனா்.
இதனிடையே, போலே பாபாவின் ஆசிரமத்துக்குள் புதன்கிழமை இரவு நுழைந்த காவல் துறையினா், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை நடத்தினா். விசாரணைக்காக இன்றி சோதனைக்காகவே ஆசிரமத்துக்குள் சென்றதாகவும், அதேசமயம், ஆசிரமத்தில் போலே பாபா இல்லை எனவும் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மைன்புரி சுனில் குமார், ஹத்ராஸ் நகர காவல் கண்காணிப்பாளர் ராகுல் மிதாஸ் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின்னணியில் சதி உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் எனவும், சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
சம்பவம் குறித்த விரிவான தன்மையையும், விசாரணையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதி விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக் குழு விசாரணை நடத்தி அடுத்த இரண்டு மாதங்களில் அதன் அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நெரிசலில் சிக்கி உயிரிழந்த 121 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினா் மற்றும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை டெல்லியில் இருந்து சாலை வழியாக புல்ராய் கிராமத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் இந்தச் சோக சம்பவம் எப்படி நடந்தது என்று கேட்டறிந்த ராகுல், அப்போது காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க காங்கிரஸ் உறுதியாகப் போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

