புதுடெல்லி: இந்தியாவில் உணவு தொடர்பான ஒழுங்குமுறை கண்காணிப்பாளர் அமைப்பு உணவுப் பொட்டங்களில் உள்ள உறைந்த கொழுப்பு, உப்பு, சர்க்கரை அளவு பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
எனினும், இந்தப் பரிந்துரை சுகாதார, பயனீட்டாளர் உரிமைகள் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.
இது ஒரு சிறிய முன்னேற்றப் படி என்றாலும், இது பொட்டலங்களின் முன்பகுதியில் பொட்டலப் பொருள்களில் உள்ள சுகாதாரமற்ற உணவு உள்ளடக்கங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்வதில் இருந்து அவர்களை திசை திருப்பும் அபாயம் உள்ளதாக அந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை ஒழுங்குமுறைக் கண்காணிப்பாளர் தவற விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில், கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிலை ஆணையம் பதப்படுத்தப்பட்ட சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை மக்கள் உட்கொள்ளாமல் இருக்க நட்சத்திர முத்திரையிட்ட தரநிலை ஒன்றை பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இந்த எதிர்ப்பில் உணவு ஆர்வலர்களும் பங்குபெற்றனர். இந்நடவடிக்கை உயர் சர்க்கரை, உப்பு, உறைந்த கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களை பயனீட்டாளர்கள் தவறுதலாக சுகாதாரமானவை என்று கருதக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால், உலர்ந்த பழ வகைகள், பருப்பு வகைகள் கொண்ட சாக்லெட்டுகள்கூட, அவற்றில் அதிக சர்க்கரை அளவு உள்ளது என்பதை மறைத்து, அவை ஆரோக்கியமானவை என்று கருத வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.