லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் உள்ள 1,500 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மழை தொடர்பான சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
பிரதாப்கரில் இருவரும் சித்தார்த் நகர், ரேபரேலியில் தலா ஒருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். பாம்பு கடித்து பண்டாவில் ஒருவர் இறந்தார்.
மாநிலத்தில் 22 மாவட்டங்களில் ஏறக்குறைய 1,476 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
ராமகங்கா, ரப்தி, காக்ரா, புத்தி ரப்தி, ரோஹின், குவானோ நதிகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டி இருப்பதாக நிவாரண ஆணையர் ஜி.எஸ். நவீன் தெரிவித்தார்.
லக்கிம்பூர் கெரி, பல்ராம்பூர், குஷிநகர், ஷாஜஹான்பூர், பாரபங்கி, சீதாபூர், கோண்டா, சித்தார்த்நகர், பல்லியா, கோரக்பூர், பரேலி, அசம்கர், ஹர்தோய், அயோத்தி, பஹ்ரைச், புடான், ஃபரூகாபாத், பஸ்தி, தியோரியா, உன்னாவ், பிலிப்தி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ஜி.எஸ். நவீன் மேலும் சொன்னார்.

