பாட்னா: பீகார் மாநிலத்தில் சாலைகள் இணைப்பின்றி வயல்வெளியில் கட்டப்பட்ட பாலம் எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
அராரியா மாவட்டத்திற்குட்பட்ட ராணிகஞ்ச் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் 35 அடி நீளத்தில் அந்தப் பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து அந்தப் பாலம் சாலைகளுடன் இணைக்கப்படலாம் என்று கிராம மக்கள் கருதியதால் அது பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை.
ஆனால், அந்தப் பாலம் எதற்காகக் கட்டப்பட்டது என்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
வயலுக்கு நடுவே உள்ள பாலத்தால் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பர்மானந்தபூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டு இருந்த சாலைகளை வயல்வெளியில் அமைக்க இருந்ததாகவும் அதற்காக விளைநிலங்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதே அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட 183 மீட்டர் நீளமுள்ள பாலம் அண்மையில் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.