திருவனந்தபுரம்: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இந்தச் சம்பவத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய கேரள சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடுதல், உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான கொண்டாட்டங்களைத் தவிர, மாவட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திட்டமிடப்பட்ட ஓணம் நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடைபெறாது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாம்பியன்ஸ் படகு லீக் நடத்தும் திட்டத்தையும் சுற்றுலாத்துறை கைவிட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவிருந்த நேரு கிண்ண படகுப் போட்டியைக் கேரள அரசு ரத்து செய்துள்ளது.