புதுடெல்லி: இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து பாராசூட் மூலம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் தற்காலிக மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளன.
இது ஒரு முக்கிய சாதனை என மத்திய பாதுகாப்பு அமைச்சு பாராட்டியுள்ளது. போர் அல்லது பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
ராணுவம் நிலை கொண்டுள்ள சியாச்சின், லடாக் பகுதிகளில் இத்தகைய தற்காலிக மருத்துவமனைகளுக்கு தேவை அதிகம். ஏனெனில் அங்கு பணியில் இருக்கும் வீரர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, ‘போர்ட்டபிள்’ என்ற வகையில் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளை அங்கு கொண்டு சென்று விமானத்தில் ராணுவம் இறக்கியுள்ளது.
‘சி130 ஹெர்குலிஸ்’ எனப்படும் ராணுவ போக்குவரத்து விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்த போர்ட்டபிள் மருத்துவமனை, லடாக்கில் 15,000 அடி உயரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது.
உலகில் இதுதான் ஆக உயரத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில், உயிர்காக்கத் தேவையான அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைகளையும் அளிக்க முடியும் என்று ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

