டேராடூன்: உத்தராகண்டில் பாடத்தைக் கவனிக்காத மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட மாணவரை அம்மாநிலக் காவல்துறை கைது செய்தது.
உத்தராகண்டின் காசிபூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் இயற்பியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ககன்தீப் சிங் கோலி.
அண்மையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தியபோது, அதனைக் கவனிக்காத சமரத் பஜ்வா என்ற மாணவரைக் ககன்தீப் கண்டித்துள்ளார்.
அத்துடன் அந்த மாணவனின் கன்னத்தில் அவர் அறைந்ததாகக் கூறப்பட்டது.
இதனால், கோபமடைந்த மாணவன் மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ககன்தீப்பை சுட்டார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) நடந்த இச்சம்பவத்தில் அந்த ஆசிரியரின் தோளில் குண்டு பாய்ந்தது.
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தது.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 14 வயது மாணவனைக் கைதுசெய்தனர். அவர்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவா்களுக்கு நல்ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.