பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகளின் மறைவிடத்திலிருந்து ரூ.11.16 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவர் ரூபேஷ் சரணடைந்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களின் தளபதி பாப்பாராவ் என்பவருக்குச் சொந்தமான பேரளவிலான ரொக்கமும் தங்கமும் வனப்பகுதிக்குள் மாற்றப்பட்டதாக காலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 10 நாள்களாக நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டுகளின் ரகசிய மறைவிடம் கண்டறியப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 7.2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் சிக்கின. இதில் ஆச்சரியப்படும் வகையில், பறிமுதல் செய்யப்பட்ட அந்தத் தங்கக் கட்டிகளில் ‘சுவிஸ்’ (Swiss) முத்திரை இடம்பெற்றுள்ளது.
அனைத்துலகத் தொடர்புடைய இந்தத் தங்கம் மாவோயிஸ்டுகளுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் சோதனைக்குப் பின்னரே இந்தத் தங்கத்தின் தரம் மற்றும் அதன் பின்னணி குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என்று பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளிடமிருந்து இவ்வளவு பெரிய அளவில் தங்கம் சிக்கியிருப்பது பாதுகாப்புப் படையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

