கோவை: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகாலத் திமுக ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரமும்கூட தனது பொலிவை இழந்துவிட்டதாகவும் மாநிலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாகவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஆந்திராவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகல் நிறுவனம், தரவு மையம், குவான்டம் மையம் என ரூ.15,000 கோடி முதலீட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தலைநகர் அமராவதியில் 2,500 ஏக்கரில் விமான நிலையம் அமைய உள்ளது.
ஆனால், கோவை விமான நிலையத்துக்கு 500 ஏக்கர் நிலம் ஒதுக்கவே திமுக அரசு தயக்கம் காட்டியது என்றார் சந்திரபாபு நாயுடு.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல்வேறு முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் மிக மோசமாகப் பாதிக்கப்படாத கிராமங்களோ நகரங்களோ இல்லை என்றும் திரு சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
எனவே, திமுக தோற்க வேண்டும், தமிழகம் வெற்றிபெற வேண்டும் என்றார் அவர்.
“திமுக கோரிக்கையின்படி, வரும் 2027ல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படும், இதற்குத் தமிழக மக்கள் தயாராக உள்ளனரா?,” என்று கேள்வி எழுப்பினார் சந்திரபாபு நாயுடு.

