அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வரும் நோயாளி ஒருவர் குணமாக, தாந்திரீக பூஜைகள் நடத்தப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத்தில் தன்னைத் தானே மந்திரவாதி என கூறிக்கொள்ளும் புவா என்பவர், ஏழை எளிய மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பவர். இவரது செல்வாக்கு எந்த அளவுக்குச் சென்றிருக்கிறது என்றால், மருத்துவமனையில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை எல்லாம் மீறி, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கே நேரடியாகச் சென்று அங்குள்ள நோயாளிகள் விரைவாக குணமடைய பூஜைகள் செய்து வருவதாக வெளியாகும் தகவல்களும் காணொளிகளும் பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
புதன்கிழமை சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியிருந்தது. அதில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வரும் புவா, தாந்திரீக பூஜைகள் செய்வதும், நோயாளியின் உறவினர்கள் புவாவைப் புகழ்ந்து பேசுவதும் காணொளியில் தெரிகிறது.
நவம்பர் மாதம் இந்தக் காணொளி எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மருத்துவமனைக்குள் இருக்கும் பாதுகாப்பு அரண்களை எல்லாம் கேள்விக்குறியாக்கி உள்ளதோடு ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வெளியாள்கள் நுழையக்கூடாது என்ற விதிமுறையையும் மீறியுள்ளது.
அது மட்டுமல்ல, மருத்துவமனைக்குள் புகைப்படங்கள், காணொளிகள் எடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே சில குறுகிய நேரக் காணொளிகளையும் புவா பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு நோயாளி அருகில் புவா நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இது குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
உறவினர் போல மருத்துவமனைக்குள் நுழைந்து இந்தத் தாந்திரீக பூஜைகளைச் செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
இந்தக் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, புவா பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று நோயாளிகள் குணமடைய பூஜைகள் செய்த காணொளிகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

