காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்

1 mins read
ada6940f-d4ee-462c-a384-3b8a2927afae
பல எழுத்துப்பிழைகளுடன் கூடிய காசோலை. - படம்: இந்திய ஊடகம்

சிம்லா: எழுத்துப் பிழைகளுடன் கூடிய காசோலை சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து இமாச்சலப் பிரதேச பள்ளி ஆசிரியரை பள்ளிக் கல்வி இயக்குநர் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசம், சிர்மாவுர் மாவட்டம் ரோஹ்நட் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் அத்தர் சிங். இந்நிலையில் பிரதம அமைச்சர் ஊட்டச் சத்து திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ரூ.7,616க்கான காசோலை வழங்கப்பட்டது.

அத்தர் சிங் ஆங்கிலத்தில் எழுதிய காசோலையில் பல எழுத்துப் பிழைகள் இருந்தன. அதில் ஏழு என்பதை சேவன் என்றும் ஆயிரத்துக்கு வியாழக்கிழமை என்றும் நூறு என்பதை ஹரேந்திரா என்றும் பதினாறு என்பதற்கு பதிலாக அறுபது என்றும் தவறாக எழுதப்பட்டிருந்தது.

பல பிழைகள் இருந்ததால் அந்தக் காசோலையை வங்கி நிர்வாகம் நிராகரித்தது. எழுத்துப் பிழையுடன் கூடிய காசோலை சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, ஆசிரியர் அத்தர்சிங், பள்ளி முதல்வர் குல்தீப் சிங் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி பள்ளிக் கல்வி இயக்குநர் அஷிஷ் கோலி உத்தரவிட்டார். விசாரணையின்போது தான் தவறாக எழுதியதை அத்தர் சிங் ஒப்புக் கொண்டார்.

அவருடைய விளக்கத்தை ஏற்காத பள்ளக் கல்வித் துறை இயக்குநர், அத்தர் சிங்கை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் மேற்பார்வை அதிகாரியாக இருந்த குல்தீப் சிங் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்