தெலுங்கானா சுரங்க விபத்து: ஒரு மாதத்திற்குப் பின்னர் மற்றோர் உடல் கண்டுபிடிப்பு

2 mins read
a0bd93d0-7cec-4267-83f2-37ee1f94e473
தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியோரைத் தேடும் பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதற்காகப் பாறையைக் குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேல் பகுதி இடிந்து விழுந்ததால், பணியில் இருந்த இரண்டு பொறியாளா்கள், இரண்டு ஆப்பரேட்டா்கள், நான்கு தொழிலாளா்கள் என மொத்தம் எட்டுப் போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.

அவா்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

கேரளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தொழிலாளியின் உடல் கடந்த மார்ச் 9ஆம் தேதி மீட்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அதிகாலை மற்றோர் உடல் காணப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த கன்வேயர் பெல்ட்டுக்கு 50 மீட்டர் தொலைவில் அந்த உடல் காணப்பட்டிருப்பதாகவும் அதனை மீட்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உடல் மீட்கப்பட்ட பிறகு மரபணுப் பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மேலும், ஆறு தொழிலாளர்களின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது.

தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகளின் 25 அமைப்புகள் மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 700 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்