ஹைதராபாத்: ஹைதராபாத் சாதர்காட் பகுதியைச் சேர்ந்தவர் வியாபாரியான ஃபஹியுத்தீன். அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டிலிருந்த தனது வயதான பெற்றோரிடம் சொல்லிவிட்டு, தனது மனைவியுடன் இருப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார் ஃபஹியுத்தீன்.
இந்தச் சூழலில், ஃபஹியுத்தீன் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் குதித்த இரு கொள்ளையர்கள், வீட்டிலிருந்த முதியோரை ஒரு அறைக்குள் அடைத்துத் தாளிட்டனர்.
பின்னர், வீட்டின் இரும்பு பீரோவில் இருந்த 700 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.
அதன்பின்னர், குளிர்பதனப்பெட்டியில் இருந்த பழங்கள், தின்பண்டங்களை ருசித்துச் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்த ஃபஹியுத்தீன் தனது பெற்றோரின் கூச்சலையும் அழுகையையும் கேட்டு அதிர்ந்து போனார்.
நடந்த சம்பவம் தொடர்பாக சாதர்காட் காவலர்களிடம் புகார் அளித்தார். விசாரணை நடந்து வருகிறது.

