சென்னை: தொகுதி மறுவரையறை கலந்தாய்வுக் கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்பர் என திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார்.
“தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் மார்ச் 22ல் நடைபெற உள்ளது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், மணி, எம்.கே.பிரேம சந்திரன், ஆந்திராவிலிருந்து மிதுன் ரெட்டி, தெலுங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.டி.ராமராவ், வினோத் குமார் எம்.பி., பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், கர்நாடகாவிலிருந்து துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
“உத்தரப் பிரதேசத்தில் 80லிருந்து 143ஆகவும் பீகாரில் 40லிருந்து 79ஆகவும் மத்திய பிரதேசத்தில் 29லிருந்து 52ஆகவும் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் குறைவாகத்தான் இருக்கும்.
“உரிமைக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க நமது பிரதிநிதித்துவம் இருந்தால்தான் முடியும். இவற்றை உணர்ந்துதான், நியாயம் கேட்கும் நோக்குடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்,” என்று திரு எழிலன் தெரிவித்தார்.

