சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் திருப்பத்துார் தானியங்கி வானிலை நிலையத்தில் 17 சென்டிமீட்டர், திருப்பத்துார் வாணியம்பாடியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தின் தென் மாநிலங்களின் மேல், ஒரு காற்றழுத்த சுழற்சி நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் அதுபோல் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சில இடங்களில், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.