புதுடெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தைத் தீர விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்துள்ளார்.
திருப்பதி திருமலையில், லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது, கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து விசாரிக்க அவர் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.
இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி திருமலை கோயில் பிரசாதத்தில் விலங்குகளின் இறைச்சி மற்றும் பிற அழுகிய பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

