பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கைப்பேசி வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
பல்லடம் அரசு மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்நிலையில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால், அது இயங்கவில்லை என கூறப்படுகிறது.
அதையடுத்து நோயாளியுடன் வந்தவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் கைப்பேசி வெளிச்சத்தில் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா, “பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது திடீரென அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டர் இயங்கவில்லை. இருந்தாலும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில், ஜெனரேட்டா் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உரிய முறையில் பராமரித்து, மின்தடை ஏற்பட்டால் நோயாளிகள் பாதிக்காதவாறு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அறிவித்துள்ளார்.