பிரயாக்ராஜ்: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதி முதல் தொடங்கியது.
இந்நிகழ்ச்சி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
45 நாட்களுக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 55 கோடிக்கு அதிகமானவர்கள் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் புனித நீராட வருவார்கள் என்பதால், 55 கோடி என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் மற்றும் கும்பமேளா பக்தர்கள் நீராடும் பல்வேறு படித்துறைகளில் உள்ள தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
அந்த ஆய்வின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் நீராடுவதால், மனிதக் கழிவுகள் அதிகம் கலந்துள்ளது. இதனால் ‘கோலி பார்ம்’ என்ற நுண்ணுயிரி அதிக அளவில் கலந்துள்ளது. அதனால் அந்த தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை. இது கவலைக்குரியது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.