சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்ததுபோல உள்ளாட்சித் தேர்தலிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற தமிழக வெற்றிக் கழகம் வியூகங்களை வகுத்து வருகிறது.
அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்கள் தங்கள் தொகுதிகளில் ஆதரவை ஒருங்கிணைத்து, தேர்தலுக்குத் தயாராகுமாறு அக்கட்சியின் தலைமை கடந்த வாரம் அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கூறினர்.
உள்ளாட்சித் தேர்தல்களில் மக்களின் ஆதரவைக் கோரி தவெக அமைச்சர்கள் ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
திமுக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றாவிட்டால் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்று வாக்காளர்களிடம் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
நகரப் பகுதிகளைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் முற்றிலும் மாறுபட்ட ஓர் உத்தியைத் தவெக கையில் எடுத்துள்ளது.
அங்கு கொள்கைகளைவிட மக்களின் அன்றாடத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றில் தற்போது உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, ‘சமூகத் தணிக்கை’ என்ற பெயரில் களப்பணியைத் தொடங்க தவெக திட்டமிட்டுள்ளது.
இம்முறை, தவெக தலைமையின்கீழ் அண்மையில் உருவாக்கப்பட்ட கூட்டணியாக அது உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க உள்ளது.
அந்தக் கூட்டணியில் இடம்பிடிக்க பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.
வரும் எல்லாத் தேர்தல்களிலும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்து போட்டியிடும் என காங்கிரசின் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
அதன்படி, உள்ளாட்சித் தேர்தலில் தவெக கூட்டணியில் இடம்பெறுவதோடு 30 விழுக்காட்டு இடங்களை ஒதுக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
கூட்டணி தொகுதிப் பங்கீடுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மக்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தவெக திட்டமிட்டுள்ளது.

