உத்தரகாசி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிந்து, அதனுள்ளேயே சிக்கிக்கொண்டுள்ள 41 ஊழியர்களை மீட்கும் பணி தொடர்கிறது.
அப்பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவதால் அவர்களை மீட்க நாள்கணக்கில் ஆகலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதனால், அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகாமல் தடுக்க, அவர்களுக்குக் கைப்பேசிகளும் பலகை விளையாட்டுப் பொருள்களும் தரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஊழியர்களுக்குத் திறன்பேசிகள் தரப்பட்டுள்ளன. அதன்மூலம் அவர்கள் காணொளி விளையாட்டுகளை விளையாடலாம். தாயம், பரமப்பதம் போன்ற பலகை விளையாட்டுப் பொருள்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இவை அவர்களின் மனவுளைச்சலைத் தடுக்க உதவும்,” என்று அதிகாரி ஒருவர் சொன்னார்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளோரில் ஒருவரான வீரேந்தர் என்பவரின் உறவினரான சுனிதா என்பவர், தம் மைத்துனர் மிகுந்த மனவுளைச்சலுடனும் பொறுமையிழந்தும் காணப்படுவதாகத் தெரிகிறது என்றார்.
ஆறு அங்குல விட்டம் கொண்ட குழாய் வழியாக ஊழியர்களுக்கு உணவும் தேவையான மற்றப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன.