பாட்னா: பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ‘ஆக இளம் வயது வீரர்’ என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியா-இங்கிலாந்து இடையே சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற இரண்டாவது ‘டி20’ போட்டியில் இந்தியாவிற்காகக் களமிறங்கினார் வைபவ் சூர்யவன்ஷி.
இதன்மூலம், பிறந்து 15 ஆண்டுகள் 99 நாள்களில், இந்தியாவுக்காக அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடிய இளம் வயது வீரர் என்ற சாதனை அவரது வசமானது.
இதற்கு முன்பு டெண்டுல்கர், 16 ஆண்டுகள் 205 நாள்களான நிலையில் இந்தியாவிற்காக அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சாதனைப் படைத்திருந்தார். தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த போட்டியில் இரண்டு சிக்சர்களுடன் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி.
இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் சூர்யவன்ஷியின் அறிமுக ஆட்டத்தைக் காண விளையாட்டுத் திடலுக்குத் திரளாக வந்திருந்தனர்.
குறைந்த ஓட்டங்களில் அவர் ஆட்டமிழந்தபோதிலும், அவரது ஒவ்வோர் அசைவையும் வரவேற்று உற்சாகப்படுத்தும் விதமாக, ரசிகர்களின் கைத்தட்டல்கள் அமைந்தன.
மீதமுள்ள மூன்று ‘டி20’ போட்டிகளில் அவர் தனது அதிரடி முத்திரையைப் பதிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் ராசா, பிறந்து 14 ஆண்டுகள் 227 நாள்களான நிலையில் அனைத்துலகப் போட்டிகளில் அந்நாட்டுக்காக விளையாடியதே உலகச் சாதனையாக உள்ளது.
இளம் வீரர் சூர்யவன்ஷிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

