விண்வெளிக்குச் செல்லும் இயந்திர மனிதன் வயோமித்ரா: இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளிக்குச் செல்லும் இயந்திர மனிதன் வயோமித்ரா: இஸ்ரோ அறிவிப்பு

1 mins read
9ce4ed60-c3c8-46f7-a530-c3897d2a1b01
இஸ்ரோ தலைவர் நாராயணன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கோவை: நடப்பாண்டு இறுதிக்குள், விண்வெளிக்கு ஆளில்லா உந்துகணை அனுப்ப இருப்பதாகவும் அதில் வயோமித்ரா என்ற இயந்திர மனிதன் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ தற்போது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

“எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள், வயோமித்ராவை விண்வெளிக்கு அனுப்புகிறோம். இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் உள்ளது. விண்வெளித் துறையிலும் ‘ஏஐ’ வந்துவிட்டது,” என்றார் திரு நாராயணன்.

இத்திட்டம் வெற்றி பெற்றால், இரண்டு ஆளில்லா உந்துகணைகள் செலுத்தப்படும் என்றும் ககன்யான் திட்டம் தொடர்பாக, இன்னும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்று குறிப்பிட்ட அவர், கடந்த 1962ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்வெளித் திட்டம் தொடங்கியது என்றார்.

“நிலாவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திரயான்-1 கண்டுபிடித்தது. முதலில் உந்துகணையில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு ரஷ்யா. அவர்கள் ஒரே உந்துகணையில், 37 செயற்கைக்கோளை அனுப்பி இருந்தார்கள்.

“நாம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வேண்டும் எனத் திட்டமிட்டோம். அதன்படி, ஒரே முயற்சியில், 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி உள்ளோம்,” என்றார் திரு நாராயணன்.

குறிப்புச் சொற்கள்